Pages

Saturday, January 29, 2011

விடுதலை வேங்கை - A Revolutionary Guard for Freedom Fight


அஸ்ஃபக்குல்லாஹ் கான் 


பிறந்தது ஷாஜஹான்பூர் - உத்திரபிரதேச மாநிலம்

இளமையிலேயே சுதந்திர தாகம் எடுத்தது அவருக்கு, அது அவரை ஒரு நல்ல கவிஞராகவும் ஆக்கிற்று.

அவரது பள்ளிப்பருவத்தில் மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப் பட்ட ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வர அதனால் அதிருப்திக்குள்ளான இளைஞர்களில் அஸ்ஃப்பக்குல்லாஹ் கானும் ஒருவர்.

இந்தியாவிற்கு வெகு சீக்கிரம் சுதந்திரம் வரவேண்டும் என்றால் அது புரட்சியின் மூலம்தான் நடக்கும் என நம்பி அதற்கான களம் காண இறங்குகிறார்.

அவரையொத்த விடுதலை வேங்கைகள் கிடைத்தனர் அவருக்கு. 

அஸ்ஃபக்குல்லாஹ் கான் மற்றும் பண்டிட் இராம் பிராசாத் பிஸ்மில் ஆகியோர் இணைந்து மற்ற புரட்சிக்காரர்கள் ஒன்றினைக்கப் படுகின்றனர்.

மெதுவான பேச்சுவார்த்தைகள் ஒன்றும் வேலைக்கு ஆகாது, ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை குலை நடுங்க வைக்கவேண்டுமானால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படவேண்டும். அதற்கு தங்களுக்கு வெடிகுண்டு, துப்பாக்கிகள் இன்ன பிற சாதனங்கள் வேண்டும், அவற்றை வாங்க பெரிய அளவு பணம் வேண்டும்.

பொது மக்களிடம் பணம் வாங்க முற்பட்டு அது நாளடைவில் குறைய பிறகு ஆங்கிலேய அரசு கருவூல பணத்தை கொள்ளை அடிக்க முடிவெடுக்கின்றனர் புரட்சிக் காரர்கள்.

ஆகஸ்ட் 9, 1925 முடிவு செய்தாகி விட்டது.

லக்னோவிற்கு அருகில் உள்ள கோரக்பூரில் வைத்து இரயிலில் ஏற்ற வரும் கருவூல பணத்தை கொள்ளை அடிப்பதென.

அதற்கான திட்டமும், நபர்களும் உறுதி செய்யப்பட.

வெற்றிகரமாக நடந்து முடிந்தது கொள்ளை ஆனால் ஆங்கிலேயர்களால் செப்டம்பர் 25, 1925 அனைவரும் பிடிபடுகின்றனர் அஸ்ஃபபக்குல்லாஹ் கானை தவிர, அவர் பிஹாருக்கு தப்புகிறார்.

சுதந்திர போரை மேற்கொண்டு முன்னிருத்த வெளிநாடு சென்று பொறியியல் கற்று பணமும் சேர்த்துவர எண்ணுகிறார் அதற்காக டில்லி செல்கிறார் அங்கு வைத்து கைது செய்யப்படுகிறார்.


சிறை வைக்கப்படுகிறார்

சிறையில் காவல்துறை அதிகாரி இந்து - முஸ்லீம் என்று மத ரீதியாக அவரை பிரித்தாள சூழ்ச்சி செய்கிறார். காவல் துறை அதிகாரியால் அனுப்பபட்டவனிடம் அஸ்ஃப்பக்குல்லாஹ் கான் சொல்கிறார் “ஆங்கிலேயர் ஆளும் இந்தியாவை விட இந்துக்கள் ஆளும் இந்தியா எவ்வளவோ மேல்” என்கிறார்.

அஸ்ஃப்பக்குல்லாஹ் கானுடன் மற்ற அனைவரையும் சேத்து கோரக்பூர் சம்பவம் கோர்டுக்கு வருகிறது 
1) அஸ்ஃப்பக்குல்லாஹ் கான்
2) இராம் பிராசாத் பிஸ்மில்
3) இராஜேந்திர லாஹிரி
4) தன்கூர் ரோஷன் சிங்
ஆகிய நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது ஆங்கிலேயே அரசால்.

சிறையில் இரண்டு வெள்ளைகார போலீஸ் அதிகாரிகள் அஸ்ஃப்பக்குல்லாஹ் கான் அடைக்கப்பட்டிருக்கும் அறையை கண்காணிக்க அப்பொழுது அவர் தொழுது கொண்டிருக்கிறார், அவர்கள் இருவரும் பேசிக் கொள்கின்றனர் “ இந்த எலியை நாளை தூக்கில் போடும் வரை எவ்வளவு பக்தி மீதமிருக்கிறது என்பதை நான் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று.

திங்கள் டிசம்பர் 19, 1927 அஸ்ஃப்பக்குல்லாஹ் கான் தூக்கு மேடை ஏறுகிறார்.

கயிற்றை முத்தமிடுகிறார், பிறகு சொல்கிறார்.

“என் கை கறை படிந்தது அல்ல இவர்களை கொன்றதனால், இவர்கள் எனக்கு இன்று அநீதி இழைக்கலாம் நாளை இறைவன் எனக்கு நீதி வழங்குவான்” , 

“இறைவன் ஒருவனே அவனது தூதராக முஹம்மத் அவர்களை ஏற்கிறேன்” என்கிறார்.

தூக்கு கயிறு இருக்குகிறது,

இந்தியா ஒரு சுதந்திர வேங்கையும், சுதந்திரவானில் மின்னும் நட்சத்திரத்தையும் இழக்கிறது.

நன்றி: இந்திய முஸ்லீம்கள் மற்றும் செய்திகள், விக்கிபீடியா





Wednesday, January 26, 2011

பெண்களும்-வேலையும்-அவர்கள் படும் அல்லல்களும்

இந்த தலைப்பிற்கு உடனே பதில்கள் பறந்து வரும்.

பெண்ணியக்கவாதிகள், பெண்களுக்காக போராடுபவர்கள், பெண்ணுரிமை இயக்கங்கள் போன்றவர்களிடமிருந்து, பதில் எதிர்பார்த்ததுதான்.

ஆம், நாங்கள் இராணுவத்தின் அனைத்து துறையிலும், விமானம் முதல் வியாபாரம் வரை நாங்கள் இருக்கிறோம் என்பர், நாங்கள் இல்லாத துறைகளே இல்லை என்பர். சரிதான்.

ஆனால் பெண்கள் வேலை செய்ய ஏற்ற உடற்கூறு கொண்டவர்கள் இல்லை என்று சொல்பவர்களை, ஆணாதிக்கம் பிடித்தவர்கள், பெண்களை போகப்பொருளாக பார்ப்பவர்கள், பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பவர்கள் என்பர்.

  அவர்கள் கோபம் நியாயமானதே எமக்கும் அவர்களை போகப்பொருளாக பார்ப்பதில் உடன்பாடு இல்லை, நாம் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பவர்களும் இல்லை. சமூகத்தில் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எண்ணி வருந்துபவர்களில் நாமும் உண்டு.
                                                                                  பெண்கள் உடற்கூறு ரீதியாக, கடின வேலைகள், அழுத்தம் நிறைந்த வேலைகள் செய்வதற்க்கு ஏற்ற அமைப்பை கொண்டவர்கள் கிடையாது அறிவியல் ரீதியாக.

சாதாரணமாக ஆண்கள் அலுவலகத்தின் பணியை தவிர வீடுகளில் வேலை செய்வதில்லை, வந்து அமர்ந்து வேறு வேலைகளில் மூழ்கிவிடுவர். ஆனால் இதே போன்றா பெண்கள் நிலை? முற்றிலும் வேறு.

இன்றைக்குத்தான் ஒரு வலைப்பூவில் காண நேர்ந்தது “நகரமா .....நரகமா” என்ற இளந்தூயவனின் வலைப்பூவில் அவர் எழுதிய ஒரு பத்தியை அப்படியே தருகிறேன் பாருங்கள்..

//எல்லாருக்கும் காலை பொழுது எத்தனை மணிக்கு தொடங்குமென்பது தெரியாது , ஆனால் சென்னைவாசிகளுக்கு 3 .00 மணிக்கு எல்லாம் தொடங்கி விடும். எழுந்ததில் இருந்து பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு உணவு, வேலைக்கு செல்லும் கணவருக்கு உணவு என்று தன் காலை வேலையை தொடங்கி, பிள்ளைகளை சீருடை அணிவித்து அவர்களை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு விட்டு, பிறகு அலுவலகம் செல்லும் தன் கணவரை எழுப்பி அவருக்கு உரிய பணிகளை செய்து முடித்து, பிறகு பகல் உணவு தயாரிக்கும் பணியை தொடங்கி, அவை முடியும் நேரம் பள்ளியில் இருந்து திரும்பும் பிள்ளைகளை உடைகளை மாற்றி, அவர்களை டியுசன் படிக்க தயார் செய்து, அவர்களுக்கு இரவு உணவு கொடுத்து உறங்க வைக்கும் வரை பம்பரமாக சுற்றி தன் கடமையே கண்ணாக இயங்கும் குடும்ப தலைவியின் நிலை இது தான்.//

மேலே சொன்னதில் இளந்தூயவன் சாதாரண வேலைக்கு செல்லாத பெண்ணை பற்றி சொல்லி இருக்கிறார் ஆனால் இதற்கு இடையில் வேலைக்கும் சென்று வரவேண்டும் பெண்கள், அப்படி இருந்துவிட்டால் அவர்களின் நிலைமையை எண்ணி பார்த்துக் கொள்ளவேண்டியதுதான்.

அதாவது 24 மணி நேரத்தில் 8-10 மணிநேரம் ஆண்கள் வேலை செய்கின்றார்கள் என்றால் 24 மணி நேரத்தில் வேலைக்கு செல்லும் பெண்மணிகள் 15 மணிகளுக்கு மேலாக வேலை செய்கிறார்கள், அலுவலகம் செல்லும் முன்பும் பின்பும். இதுதான் சமூகம் அவர்களுக்கு தரும் விடுதலையா? இதை சொன்னால் நாங்கள் ஆணாதிக்கவாதிகளா?

பெண்களுக்கெதிரான கொடுமைகள்

10 வருடங்களுக்கு முன்பு ஒரு சர்வே; வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிப்பெண்கள் இவர்களிடம் கேட்கப்பட்டது தாங்கள் யார் யாரால் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளானார்கள் என்று?

பதிலில் தங்களது பணியிடங்களில், கல்லூரி நண்பர்களிடம், கார் ஓட்டுனர்களிடம் மற்றும் சொந்தங்கள் என்று சொன்னார்கள்.

இன்றுவரை வேலைக்கு செல்லும் பெண்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் சொல்லி மாளாது. சமீபத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இடங்களில் டெல்லிதான் முதலிடம் வகிக்கிறது.

சமீபத்தில் RAW என்ற இந்திய உளவுத்துறையில் தனது மேலதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை நாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். இதுபோன்ற இன்னும் எவ்வளவோ...

அமெரிக்காவில் பில் கிளிண்டனது காலத்தில் இராணுவத்தில் பெண்கள் பிரிவை ஏற்படுத்த அந்த பெண்கள் தங்களது மேலதிகாரிகளால் பெருமளவு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக பில் கிளிண்டன் பாரளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தது.

அமெரிக்க இராணுவத்தின் ஒரு சர்வே:

  • 2007ல் அமெரிக்க இராணுவத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் தாக்குதல்கள் 2688,
  • 41% பெண்கள் இராணுவத்தில் பாலியல் தாக்குதலுக்குள்ளாகினர்
  • ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கெதிரான பாலியல் தாக்குதல்கள் 2% லிருந்து 13% அதிகரித்து வருகிறது
  • ஒரு இராணுவ வீரன் எதிரியை வீழ்த்துவதை விட அதிகமாக எண்ணிக்கையில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்.
  • 2008ல் இராணுவத்தில் மட்டும் 1516 பாலியல் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன
  • 3ல் 1 பகுதி பெண்கள் தாங்கள் இராணுவத்தில் பணியாற்றும்போதுதான் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளானோம் என்று தெரிவித்துள்ளனர். 
எனக்கு தெரிந்து ஒரு அலுவலகத்தில் ஏதுமறியா ஒரு பெண் வேலைக்கு சேர்ந்து அவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம், மிக உயர்ந்த மேலதிகாரி யாரும் இல்லாத நேரத்தில் தனது அருகில் நின்றுகொண்டு அதை செய் இதை செய் என்று ஏவியவாறு அசிங்கமான செயல் செய்வதாகவும் நான் அவர் முகத்தை பார்க்கவில்லை என்று சொல்லி சங்கடப்பட்டார்.

ஒரு ஆண் சமயம் சந்தர்ப்பம் வாய்க்கும்போது தான் ஆண் நீ பெண் என்பதை நிரூபிப்பான்.

சமூகத்தில் திருமண மாகத பெண்கள் வேலைக்கு செல்வதை பெண்ணுரிமை என்று கருதுகின்றனர். ஆனால் திருமணம் முடித்து அவளது கடமைகளையும் பிறரது கடைமைகளையும் முடித்து விட்டு வேலைக்கு சென்று படும் அல்லல்களை கருத்தில் கொண்டு பொதுவாகத்தான் இந்த விடயத்தை உற்று நோக்கவேண்டும்.

தவறு என்பது எல்லா இடத்திலும்தான் நடக்கும் அதற்காக பெண்கள் வேலை செய்யாமல் இருக்க முடியுமா? என்று கேட்க முடியாது, ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நடுநிலையுடன் சிந்திக்கவேண்டும்.

போகப்பொருள்

அது ஒரு விளம்பரம், உலகின் மிக உயர்ந்த காருக்கான சந்தையில் அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட விளம்பரம், 

காருக்கு முன்னே அரை குறை ஆடையுடன் இரண்டு பெண்கள், 
குரல் ஒலிக்கிறது எங்கள் கார் இன்ன இன்ன வசதிகள் கொண்டது வேண்டுமானால் ஓட்டிப் பருங்கள் என்று. எதை? காரையா? அல்லது ..........

இதில் யார் போகப் பொருள், யார் ஆக்குகிறார்கள் இந்த நிலைமையை? இதை நாங்கள் சொன்னால் நாங்கள் பெண்ணடிமைவாதிகள்..

இதை பெண்ணுரிமை பேசுபவர்கள் புரிந்து கொள்வதில்லை.

முன்னர் டெல்லியில் உள்ள காவல்துறை உயரதிகாரி பெண்களும் தங்களது ஆடைகளை மற்ற ஆண்களை கவரும் விதமாக உடுத்துவதை தவிர்க்கவேண்டும் என்று சொன்னார்.

பெண்களின் ஆடைகளிலும் தவறுகள் இருக்கிறது,


எனினும் இது மிகப்பெரிய விடயம், இதை இவ்வளவு சுருக்கமாக விவாதித்து விட முடியாது. சில விஷயங்களை மட்டுமே கோடிட்டு காட்ட முனைந்துள்ளேன்.

தகவல்கள் உதவி: இளந்தூயவன், Sexual Assault of Women in the Military(by:Lexy Mayer and Joe Endress)





Tuesday, January 18, 2011

மொழி மற்றும் பிராந்திய வெறி தகுமா?


மொழி என்பதன் அர்த்தமாவது மனிதன் தன் உள் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்த உபயோகிக்கும் ஒலியின் ஏற்ற இரக்கங்களே அன்றி எந்த ஒரு மனிதனுக்கும் அவன் பேசும் மொழிக்கென பிரத்யேகமான சிறப்பம்சம் ஒன்றும் இல்லை.

பல விதமான மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட நாடு நம் இந்தியா.

பல்வேறு நாடுகளில் நடக்கும் கலவரங்கள், இனப்படுகொலைகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றிர்க்கு காரணம் அந்தந்த பிராந்திய மக்கள் பேசும் மொழியை அடிப்படையாக கொண்டதாக அமைகிறது.

நமது இந்தியாவிலும் அதுபோல பல மாநிலங்களை சொல்லலாம் உதாரணமாக கர்நாடகா-தமிழ்நாடு-கேரளா, மகாராஷ்டிரா அதன் அருகில் உள்ள மாநிலங்கள் என அனைத்து மாநிலங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

மத்திய கிழக்கில் வேலை நிமித்தமாக இருக்கும் நபர்கள் இதை நன்கு உணரலாம் உதாரணமாக மலையாளிகள் - தமிழர்கள். மத்திய கிழக்கை பொறுத்தவரை மலையாளிகள் ராஜ்ஜியம்தான், வேலையாகட்டும், பெரிய பதவிகள் ஆகட்டும் அனைத்திலும் அவர்களே கோலோட்சி இருப்பதை பார்க்க முடியும். என்ன விலை கொடுத்தாலும் அவர்கள் ஆட்களே தனது நிறுவனத்தில் நுழைப்பதை காண முடியும். தமிழர்களை பாண்டிகள், அண்ணன் மார்கள் என்று கிண்டலாக அழைப்பதையும் பார்க்கிறோம்.

ஏன் இப்படி?

மற்ற நாட்டவர்களைப் பொருத்தவரை அனைவரும் இந்திய மக்களாகத்தான் பார்க்கப் படுகின்றனர், ஆனால் நமக்குள் உள்ள இந்த உள் குத்துதான் பிரச்சினையே, சரி வெளிநாடுகளில்தான் இந்த பிரச்சினை உள்நாட்டில் நிலைமை இன்னும் மோசம்.

ஆறுகள், தண்ணீர் தேக்கங்கள் என்பது உலக பொது சொத்துதான், இயற்க்கை வளங்கள் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானதுதான், மனிதனுக்காக பாகுபாடின்றி படைக்கப்பட்டதே அத்தனை இயற்கை வளங்களும், அதனால் அனைத்து மக்களும் அதை அனுபவிப்பதற்க்கு உரியவர்களே.

ஒரு மாநிலத்தில் அல்லது பக்கத்து நாட்டில் ஒரு ஆறு உருவாகி அது சரிவான இடம் நோக்கிப் பாய்ந்து கடலை அடைகிறது, ஒரு மாநிலத்தில் உள்ளவர்கள் அதை தன் தேவைக்குப் போக அதை அதன் போக்கிலேயே விட்டு விடத்தான் வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லை இன்றைய நிலைமை.


பாலாற்று குறுக்கே அணை கட்டுவது தொடர்பான பிரச்சினைகளை நாம் அறியலாம், அரசு அதிகாரிகளே பொதுவாக ஒரு விடயத்தை அணுகாமல் குறுகிய எண்ணத்துடன் ஒரு சார்பாக அவர்கள் மொழி பேசும் மாநிலத்தின் சார்பாக நடந்துக் கொள்வது நடக்கிறது.


கர்நாடாகா-தமிழ்நாடு பிரச்சினை காவிரியில் ஆரம்பித்து நடிகர்களின் படங்களின் வெளியீடு வரை தொடர்கிறது. இது ஒரு மோசமான நிலைமைதான். நடுவர் மன்றம் தீர்ப்புகளையே மீறும் அத்துமீறல்களும் நடந்த்ததை நாம் அறிவோம்.


உலகில் மூன்றாவது உலக யுத்தம் நடப்பதென்றால் அது தண்ணீர் பிரச்சினைக்காக தான் இருக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.


வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பும் தகுதி அடிப்படையில் அல்லது விகிதாச்சார முறைப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், அதை விடுத்து என் மாநிலத்தில் உள்ளவனுக்குதான் வேலை வேண்டும் என்பது மிகத் தவறான வாதமே.

இந்தியாவில் உள்ள மக்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் வாழும் உரிமை உள்ளது அதைவிடுத்து இந்த மொழி பேசுபவந்தான் இங்கு வசிக்க வேண்டும் என்பது மிக மிக குறுகிய எண்ணமே.

தனது மொழியை அழியாமல் பார்த்துக் கொள்வதில் அந்த மொழி பேசும் மக்களுக்கு அக்கறை இருக்கவேண்டியதுதான் ஆனால் அது தீவிரவாதமாக மாறுவது ஏற்றத்தக்கது அல்ல.

தமிழ்தீவிரவாதிகள், கர்நாடகதீவிரவாதிகள், மாராட்டிய தீவிரவாதிகள் இது அணைத்தும் ஏற்புடையதல்ல பொது இந்தியாவிற்கு. ஆனால் எவ்வளவு சொன்னாலும் பொதுவாக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமது மனதிற்க்கு இன்னும் வரவில்லை என்றுதான் தெரிகிறது. அதன்படி நாடுகளும், மாநிலங்களும் தண்ணீர் பிரச்சினைக்காக அடித்துக்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நம்மால் உணரமுடிகிறது.


தெலுங்கானா
தனி தெலுங்கானா பிரச்சினையும் நம்மை கவலை கொள்ள வைக்கிறது ஆந்திராவில் எதிர்கட்சிகள் வேண்டுமானால் அதை அரசியலாக்கலாம் ஆனால் மாணவர்கள் அந்த வகையான போராட்டங்களில் கலந்து கொள்வது, கலவரங்களில் ஈடுபடுவது, நம்மை கவலையில் ஆழ்த்துகிறது, இப்படி ஆளாளுக்கு தனி பிராந்தியம் என பிரித்து பார்த்தால் அதற்காக ஆயுதமேந்தி போராட ஆரம்பித்தால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் ஒறுமை பாட்டுக்கே ஊறு விளைவிக்கும்.


 சர்வதேச அளவில் இந்திய மூளைக்கென்று மிகுந்த மதிப்பும் மரியதையும் உள்ளதை எம்மால் அனுபவ ரீதியாக உணரமுடியும் ஆனால் நாம் இதேபோல் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் போராட்டங்களை கையிலெடுத்து போராடிக் கொண்டிருந்தால் சர்வதேச அளவில் இந்திய மதிப்பு சரியத் தொடங்கும் என்பது உறுதி, உள் நாட்டு பிரச்சினையில் சிக்கி நாம் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான், நாடு ஒன்றும் முன்னேறாது.

 உலகில் இன வாதம், மதவாதம், தேசிய வாதம் இந்த மூன்றும் யார் பேசினாலும் தவறே, எந்த மக்களையும் அனைவரும் மக்களாகத்தான் பார்க்க வேண்டும்.                                                                                                                                            
                  



Wednesday, January 12, 2011

என்ன தலைப்பென்று தெரியவில்லை

இந்தியா.......
வருங்கால வல்லரசு,,,,,,,,,,,,,

 உலகப் பொருளாதாரம் அதிகம் பாதிப்படைந்தாலும் பாதிப்படையாத வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடு, 


இந்தியர்கள் உலகப் பணக்காரர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்துக்கொண்டுள்ளனர்,
இந்தியர்களின் சந்தையில் நுகரும் பொருட்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துக்கொண்டுள்ளன,...
                                                                          எல்லாம் சரிதான் கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனால் இந்த நவநாகரீக இந்தியர்களின் மனம் எப்படி உள்ளது.....நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டுதானிருக்கிறது, ஆம்.

எங்கள் ஊரில் கடந்த ஞாயிறு ஒரு முதியவர் ரோட்டில் விழுந்து கிடந்தார் அரை மயக்கத்தில், உடலிலும் காலிலும் காயங்கள், சிறுநீர் அதே இடத்தில் கழித்திருந்தார். அருகில் கடை வைத்திருப்பவர்களிடம் விசாரிக்கையில் தெரியவில்லை என்றார்கள்,
                                                   எந்த ஊர்? சாப்பிட ஏதாவது வேண்டுமா என்றால் அழுகிறார். நமக்கு மனதை பிசைகிறது, சிறு கூட்டம் கூடிற்று, அங்குள்ள ஒரு பெண் ஒருவர் சொன்னார் “உனக்கு இந்த கதியென்றால் உன்னை இப்படி விட்டவனுக்கு எந்த கதியோ” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

 இந்தியாவில் முதியோர்களை வீதிகளில் கவனிப்பாறற்று விடும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுள்ளது, இதில் அதிகம் சிங்கார சென்னை. அதாவது தமிழகம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்,

நம் அனைவருக்கும் தாய் என்றால் பாசம் அதிகம் அப்படி இருக்கையிலேயே எத்தனையோ தாய்மார்கள் பிச்சை எடுக்கின்றனர். ஆனால் தந்தை என்றால் சிறிது இளக்காரம்தான்.

படித்தவர்கள் அல்லது நகரங்களில் வசிப்பவர்கள் தனது பெற்றோர்களை ரோட்டில் விட மாட்டார்கள் டீசண்டாக முதியோர்கள் இல்லத்தில் விடுவர், கிராமங்களில் அப்படி இல்லை ஏதாவது சண்டை சச்சரவுகள் வந்து பெற்றவர்களை திட்டிவிட்டால் ரோஷம் வந்து ”இவன் கையால் நான் ஏன் சாப்பிட வேண்டும்” என்று,  வீட்டை விட்டு வந்து விடுவர்.

அதனால்தான் கிராமங்களை ஒட்டியுள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் அதிகம் வயதானவர்கள் பிச்சை எடுப்பதை பார்க்கலாம்.

இதில் முக்கியமாக குடிப்பழக்கமும், மருமகள்கள் சண்டையும் காரணங்களாக அமையும்.

கல்லாகிக் கொண்டு வரும் மனித உள்ளங்களுக்கு மத்தியில் நமது வருங்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்பது கேள்விக்குறிதான்.

இந்த கட்டுரைக்கு எந்த தலைப்பு வைப்பது என்று கூட அதிக சிரத்தை எனக்கு எனெனில் மேம்போக்காகவும், சினிமா செய்திகளை விரும்பி படிக்கும் நம் பதிவர்களிடையே, நெஞ்சை சுடும் உண்மைகளை படிக்கும் பழக்கம் இல்லாத பதிவர்களுக்கு மத்தியில், என்ன இருக்கிறது இதில் என்று அவர்களை படிக்க வைக்க கவரும் தன்மையுள்ள தலைப்பு வேண்டுமே என்றுதான்.

வருங் காலத்தில் நான் ஒரு முதியோர் காப்பகம் வைத்துள்ளேன் தங்களால் இயன்றதை உதவுங்கள் என்று சொன்னால் “ இவனை ஏன் நாம் இப்போது பார்த்தோம்” என்று மனிதர்கள் நினைப்பார்கள் போல.

மான்களையும், கொக்கு போன்றவைகளை உணவிற்க்காக கொன்றால் கைது  அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கும் அரசாங்கம் மனிதன் ரோட்டில் கிடந்தால் பரவாயில்லையா? நல்லா இருக்கு 

இதுதான் வளர்ச்சியடைந்த இந்தியா!!!!!!!!!!!!!!!!!

Friday, January 7, 2011

போரட்டக் குழுக்கள் தேர்ந்தெடுத்த அரசியல் பாதை

உலகில் பல்வேறு காரணங்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அவர்களின் போராட்டங்களுக்கு அவர்களால் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது, உரிமைகளுக்காக, இன விடுதலைக்காக, ஒடுக்குவதற்கெதிராக, அநீதிக்கெதிராக என்று பலவாராக......

அவற்றில் முக்கியமானவற்றின் வரலாறுகளை நம்மில் பலர் அறிந்திருப்பர், 

அந்த வகையில் அப்பேர் பட்ட போராட்ட குழுக்களுக்கு பெரிய பேரிடி எதுவரையில் என்றால் செப்டம்பர் 9/11 தாக்குதல் வரையில்தான், அது ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக இனப்படுகொலை, அத்துமீறல், உரிமை மீறல் போன்ற நியாயத்திற்காக போராடிய குழுக்கள் கூட தர்ம சங்கடத்தில், நெருக்கடியில் சிக்கின.

அமெரிக்கா ஆரம்பித்து வைத்தது தீவிரவாதத்திற்கெதிரான போர், அப்போதைய புஷ் சொன்னார் “நீங்கள் எங்கள் அணியில் இல்லையென்றால் எதிரணியில் இருக்கிறீர்கள்” என்று. அதைத் தொடர்ந்து பட்டியலில் அனைத்து போராட்டக் குழுக்களும் சேர்க்கப்பட்டது இஸ்ரேலிய தீவிரவாத குழுக்களைத் தவிர,  போரட்டக் குழுக்களுக்கு நெருக்கடி ஆரம்பித்தது.

போராட்ட குழுக்களுக்கு நிலவி வந்த பன்னாட்டு மக்களின் ஆதரவும், நியாயமான காரணங்களும் மேற்கத்திய உலகால் நிராகரிப்பட்டன.
                                                                                                 இந்த சமயத்தில்தான் சில மத்திய கிழக்கில் செயல் பட்டுவரும் போராட்ட குழுக்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தன, அதாவது தங்களது ஆயுத மேந்திய போராட்டம் நடந்து கொண்டிருந்தாலும் அவைகள் அரசியல் களம் கண்டன. ஜனநாயக வழியில் வேட்பாளர்களை முன்நிறுத்தி மக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டன. மக்கள் மனதை வென்றன. தேர்தலிலும் பெறுவாரியான் வாக்குகள் பெற்று சர்வேதேச சமுதாயத்தை ஆச்சர்யத்திற்குள்ளாக்கின.

இதுதான் முக்கியம், சர்வதேச சமுதாயம் தன்னிலிருந்து கவனத்தை திருப்பாமல் அதே சமயம் தங்களது போராட்டத்திலிருந்தும் விலகிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டன. தக்க தருணத்தில் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுதான்.

ஆனால் சதாம் உசேன் இந்த அரசியலை புரிந்துகொள்ள, செயல்படுத்த தவறினார்.அது அவரது கொலையில் போய் முடிந்தது,

விடுதலைப்புலிகளைப் பொறுத்த வரையில் இந்த இடத்தில்தான் அவர்களது தவறான முடிவெடுத்தார்கள் என்பது என் கருத்து, மேறகத்திய உலகம் அரசியல் பண்ணும்போது இவர்களும் பண்ண வேண்டியதுதானே.

ஆம்.

போர் நிறுத்தத்தை அறிவித்து விட்டு, அரசியலில் மும்முரமாக, அரசியல் பிரிவை வலுப்படுத்தி அரசுடனும், பல்வேறு நாடுகளின் மூலமும் நியாயமான தேர்தலை நடத்த சொல்லி வேட்பாளர்களை நிறுத்தி சர்வதேச சமுதாயத்தின் நன் மதிப்பை பெற்றிருக்கலாம்.

இவை அனைத்தும் 3 வருடங்களுக்கு முன்னேயே செயல் படுத்தி, பல உயிர்களை பலி கொடுக்காமல் இருந்திருக்கலாம். தமிழ் மக்களாவது மிச்சப்பட்டிருப்பர். ஆனால் இப்போதய நிலை...............

ஆனால் ஒன்றை புரிந்து கொள்வது முக்கியமானது சதாம் உசேன் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பிர்க்கு பின் இருக்கும் எண்ணெய் அரசியல் போல, சில இயக்கங்களையும், சில நபர்களையும் அழிக்க வேண்டும் என்று ஆதிக்க சக்திகள் நாடினால் அதை எந்த வகையிலும் முடித்தே தீர்வர், எந்த அரசியலும் அங்கு எடுபடாது...........

Monday, January 3, 2011

ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறதா அவர்களின் தலைவர்களால் - பகுதி 1

ஆம் இப்போதய சூழ்நிலையில் விவாதிக்கப் பட வேண்டிய விஷயம்தான்.

நாடு சுதந்திரமடைந்து 50 வருடங்களுக்கு மேலாகிறது, நம் நாட்டில் எத்தனையோ மதங்கள், சாதிகள், சங்கங்கள்.

ஆண்டாண்டு காலமாக அடிமை படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்று தலைவர்கள் போராடினர்.

இத்தனை வருடங்கள் கடந்த பிறகு கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளில் முக்கியமாக தமிழகத்தில் ஜாதியை உயர்த்தி பிடித்த கட்சிகள் தோன்றலாயின, அவர்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் போராடி பெற்றுத் தருவதாக சொல்லி அதன் தலைவர்கள் பெரு வாரியான மக்களை திரட்டினர்.

மக்களும் அவர்களின் மேடைப் பேச்சுகளை நம்பி அவர்களின் பின் சென்றனர்.
அந்த வகையில் எனக்கு கிடைத்த, தெரிந்த , கட்சிகளை பற்றிய எனது கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு:-

காந்தி ஜி யை பற்றிய சர்ச்சை

காந்தி ஜி தேசத் தந்தை,

ஆனால் தலித்களுக்காக தனி இட ஒதுக்கீடும், சில சலுகைகளும் கிடைப்பதற்காக அம்பேத்கர் முன் வைத்த வரைவுத்திட்டத்தை அமல் படுத்தக் கூடாது என்பதில் காந்தி ஜி தீவிரமாக இருந்தார், உண்ணாவிரதமும் இருந்தார், தலைவர்களின் அழுத்ததின் காரணமாக அம்பேத்கர் அதை வாபஸ் பெற்றார்.

பாட்டாளி மக்கள் கட்சி

வன்னியரை ஆதாரமாக வைத்து உருவாக்கப் பட்ட கட்சி, ஆரம்பத்தில் வன்னியர் சங்கமாக இருந்தது பின்பு பா.மா.க வாக உருவெடுத்தது, (கேளிக்கைக்காக சொல்வர் :- திண்டிவனம், விழுப்புரம் பகுதியில் மரங்களை ரோட்டில் போட்டு அரசியல் செய்தே வளர்ந்தனர் என்று,)

சரி வளர்ந்தாகி விட்டது பிறகு என்ன? பலத்தை காட்ட வேண்டியதுதான்.

பலத்தைக் காட்டியே இத்தனை சீட்கள் என்று பேரம் பேசி சீட்களைப் பெற்று வென்று வந்தனர், இதன் விசுவரூபமாக கடந்த ஆட்சியில் முக்கியத்துறையான இந்திய மருத்துவத் துறை தரப்பட்டது, அன்புமணியும் அவர் பங்கிற்க்கு என்ன செய்தார் என்று விலாவரியாக தெரியவில்லை ஆனால் நடிகர்களை புகை பிடிக்கக் கூடாது என்று சொல்லி அதற்கு இந்தி நடிகர் ஷாருக்கான் பதில் சொன்னதால் இந்திய பிரபலம் அடைந்தார்,

கூட்டணி பிரிந்தது, பின்பு பழைய அஸ்திரத்தை எடுத்தார், வன்னியர் மேம்பாடு, சினிமா சீரழிக்கிறது, முழு மது விலக்கு என்று,

ஆனால் ஆட்சியில் உள்ளபோது கிடைத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுக்க ஆஸ்பத்திரிகள் ஒழுங்காக இருக்கின்றனவா? கடை கோடி இந்திய கிராமத்திலும் மருத்துவ வசதி கிடைத்ததா என்றால் இல்லை, வட இந்திய கிராமங்களில் 1000 நபருக்கு ஒரு மருத்துவர்தான்.

சரி அதை விடுங்கள், வன்னியர்கள் மேம்பாடு அடைந்தார்களா என்றால்...... தெரியவில்லை.........அவர்கள் பகுதியிலேயே உள்ள கிராமங்களில் கூட ஏதாவது மாறுதல் நிகழ்ந்ததா என்றால் ம்....கூம்.....இல்லை,

இப்போது எதிரணியில் இல்லை என்றாலும் திரும்பவும் வன்னியர் அஸ்திரத்தை எடுத்துள்ளனர்.

மக்கள் என்ன நினைப்பர், 

விடுதலை சிறுத்தைகள்

மிகப் பெரும் படிப்பு படித்தவர், தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர் ,,,,,,,திருமாவளவன் ஆரம்பித்த கட்சி,

தாழ்த்தப்பட்டவருக்கான விடியல் வெள்ளி, சுழன்றடிக்கும் சூறாவளி என்றார்கள்..

விடுதலை சிறுத்தைகள் .....

ஆகா பெயரே பயமுறுத்துகிறதே,,, என்று பார்த்தால்............ஒன்றும் இல்லை,

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை புலிகள் போல் விடுதலை சிறுத்தைகள்......ஆனால் ....

சரி தமிழ் நாட்டிலும் அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடி ஒரு வெற்றி பெற்றுவிடுவார் என்று பார்த்தால்....... ஒன்றும் இல்லை....

அதே ஜாதி மக்களை உசுப்பேற்றும் பேச்சுக்கள் பேசி, கூட்டத்தை காண்பித்து வாங்கியாகி விட்டது சில பல பதவிகளை, சீட்களை...

இதனால் உண்மையிலேயே விடுதலை அடைந்த்ததா அச்சமூகம் என்றால் .............ஒன்றும் இல்லை,

இவர்கள் இருக்கும் போதேதான் நடந்தது, விழுப்புரத்திற்கு அருகில் மலம் திண்ண வைத்த சம்பவம், இன்று வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் தாழ்த்தப் பட்டவர் நின்று ஜெயிக்க முடியாத சூழல்.

எங்கே போயிற்று விடுதலை சிறுத்தைகள், திருமாவளவன்.......

என்ன ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கும் கூட்டம் கூடும், பின்பு கலைந்து செல்வர், மற்ந்து விடுவர். இதுதான் நடந்து வருகிறது,

ஏனெனில் இவர்கள் சார்ந்திருப்பதோ மாநில பெரிய கட்சிகளை, அவர்களைத் தாண்டி ஒன்றும் பெரிய அறிக்கை விடமுடியாது இவர்களால்.

இதை விடக் கூத்து என்ன தெரியுமா? இவர்கள் தொண்டர்கள் இருக்கும் ஊர்களில் பிளக்ஸ் வைப்பர் எப்படி தெரியுமா?

திருமாவளவனுக்கு விடுதலைப்புலிகள் தலைவர் மாதிரி உடை அணிவித்து கையில் துப்பாக்கி கொடுத்து, அருகில் பிரபாகரன் போட்டோவையும் போட்டு ..ஏதோ ஆயுதம் தாங்கி போராடுவர் போல,

இப்படியெல்லாம் வித விதமாக,,,, இதைப் பார்த்தால் நாம் என்ன நினைப்பது ....... காமெடியாக இல்லையா?

இது ஒருபுறமிருக்கட்டும், காவல் நிலையங்களில் என்ன பெயர் இவர்களுக்கு தப்பான முத்திரை குத்தப்பட்டுள்ளது இவர்கள் மேல்,

கூட்டம் சேரும் என்பதெல்லாம் விடுதலைப் பெற்றுவிட்டோம் என்பதாக எடுத்துக் கொள்ள முடியுமா?

இதை விடுங்கள் இவர்களின் மாவட்ட பொருப்பில் உள்ளவர்கள் பண்ணும் கட்டப்பஞ்சாயத்துகள், அதன் மூலம் வரும் பிரச்சினைகள் என எவ்வளவோ,

இதுதான் இவர்கள் சொன்ன விடுதலையா?

பிரபாகரன் போல இவரால் ஆக முடியுமா?  அவ்வளவு ஏன் விடுதலைப்புலிகள் மேல் உள்ள தடைகளை நீக்க ஆலோசனைக்கு அரசு கூட்டிய கூட்டத்தில் கூட எத்தனை கட்சிகளின் தலைவர்கள் கூடினார்கள்? வை.கோ வைத்தவிர,

அப்போ வெறும் பேச்சுதான் வெளியே ஒன்றும் செயலில் இல்லை, தமிழன் தமிழன் என்று வெற்றுப்பேச்சுதான்.

ஆக உண்மையில் விடுதலை என்பது என்ன? பல்லின சமூகத்தில் வாழும் மக்களால் ஜாதியை தூக்கி எறிய முடிகிறதா, அவர்கள் மனதை வென்றெடுக்க முடிகிறதா? அதுதான் விடுதலை, அதுவல்லாமல் மழை, வெயில் என்று வந்து அவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதற்காக ஒரு ஆர்பாட்டம், தொலைக்காட்சியில் ஒரு செய்தி அவ்வளவுதான். இது ஒரு மக்கள் விடுதலையா? இதனால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் ஓங்கி வளர்ந்து விடுமா?

ஆட்சியில் இருக்கும் கட்சிகளே நாம் போராடவிட்டாலும் அவர்களது ஓட்டு வங்கிக்காக நிவாரணத்தொகை வழங்கி விடும். இதோ... இந்த மழையில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் தயாராகிவிட்டது......

சிந்திக்கிறேன் தொடர்ந்து...........